History of Singapore
சிங்கப்பூரின் வரலாறு
Part 02
![]() |
History of Singapore in Tamil |
History of Singapore Part 01 இன் தொடர்ச்சி ......
இன பிரச்சினை, கௌரவம், வந்தேறிகள் பிரச்சினை, ஆண்டவம்சம் போன்ற கோஷங்கள், ஆர்ப்பாட்டங்கள் இரு நாட்டவருக்கும் நல்லதல்ல. நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
சிங்கப்பூர் மலேயாவிலிருந்து பிரிந்து தனிநாடு ஆவதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தனி நாடாகும் வரை நீர், மின்சாரம் என எல்லாமே மலேசியாவிடம் இருந்து பெற்ற சிங்கப்பூர் கொஞ்சம் மிரண்டது. நாட்டு நிலமையால் லீ குவான் யூ இடிந்து போனார்.தன் திறமையால் மெல்ல தெளிந்தார் லீ. உடனே சிங்கப்பூர் குடியரசு என அறிவித்தார். வேறு சில அச்சுறுத்தல் வந்தன. இந்தோனேஷியா அல்லது சீனா சிங்கப்பூரினை கைப்பற்றும் அபாயம் இருந்தது. அப்போது இந்தோனேஷியாவில் ஒரு தலைவர் இருந்தார். அவர் பெயர் சுகர்தோ. அவர் இன்றைய சீனாவை போல் இந்தோனேஷியா வரும் என்ற கனவில் இருந்தார். தன் நாடான இந்தோனேசியாவின் 17ஆயிரத்து ஒன்றாம் தீவாக சிங்கப்பூரை இணைக்கும் திட்டமும் அவர் கண்ட கனவுகளில் ஒன்று.
எல்லா அச்சுறுத்தலையும் தாண்டி லீ சுதாகரித்து சிங்கப்பூரை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடானார். நியூயோர்க் , ஹாங்காங் போல சிங்கப்பூரும் வியாபார இடம் என குறித்த மேலைத்தேய, ஐரோப்பிய நாடுகள் முதலிட ஆர்வம் காட்டின. குறிப்பாக சிங்கப்பூரின் துணைபிரதமராக இருந்த டேவிட் மார்ஷல் சிங்கப்பூர் வளர்ச்சியில் மறக்க முடியாதவர்.
நாட்டினை வளர்ந்த நாடாக உயர்த்துவது என முடிவெடுத்த லீ தம் நாட்டு மக்களுக்கு ஆனந்தம் படத்தில் மம்முட்டி சொல்லும் வசனம் சொன்னார். "யாரும் கவலைப்பட வேண்டாம், எல்லாரும் இருக்க ஒரு வீடு, உழைக்க ஒரு வேலை, உலகம் எம் நாட்டை மதிக்குமளவு பணம், இதை தாண்டி தான் மனித உரிமை, மத உரிமை, பத்திரிகை தர்மம், இன வேறுபாடு எல்லாம், அதுவரை நேர்மையான உழைப்பு மட்டுமே நமது இலக்காக இருக்க வேண்டும்".
சொல்லிவிட்டு மட்டும் போகாமல் செயலில் இறங்கினார். 2 ம் உலகப் போரினால் சீரழிந்த ஜெர்மனும், ஜப்பானும் மீண்டு வந்து வாழும்பொழுது நாம் ஏன் முன்னேறி வாழ முடியாது என உலகை எல்லாம் ஒப்பிட்டு கணக்கிட்டார், ஒரு உண்மை புலப்பட்டது.
உதாரணங்களாக காட்டிய ஜப்பானோ, ஜெர்மனோ,இஸ்ரேலோ ஒரே இனமக்களின் நாடு, ஆனால் சிங்கப்பூர் பல இனமக்களின் நாடு. அதனால் அற்புதமான முடிவெடுத்தார். இன சமத்துவமும், மத கட்டுப்பாடும் கண்டிப்பாக இல்லாமல் முன்னேற்றம் சாதகம் இல்லை. இன ,மத பேதமற்ற நாடாக வேண்டும்.
அதனை அறிவித்துவிட்டு உதாரணம் சொன்னார், "அந்த நாட்டைப் பார்த்தீர்களா பல இனமக்கள் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்து நாட்டை சொர்க்கபுரியாக வைத்திருக்கின்றார்கள், அதுவே இனி நமது கனவுநாடு, அவ்வாறு வருவதே எம் இலட்சியமாக இருக்க வேண்டும்".
அந்த உதாரண நாடு அமெரிக்காவோ கனடாவோ அல்ல, அது "இலங்கை" . அன்றைய இலங்கை உதாரணமாக காட்டும் அளவிற்கு அப்படித்தான் இருந்தது, அப்படியே இருந்திருந்தால் இன்று ஹாங்காங் அளவிற்கு வளர்ச்சியடைந்திருப்போம். இன மத வெறியும், ஒற்றுமையின்மையும் நாட்டை நாசமாக்கியது.
இலங்கையில் மேற்கண்ட பிரச்சனைகள் அதிகமாகி நாடு நாசமாய் போகத் தொடங்கியது. நம் நாட்டிலிருந்த நல்ல விடயங்களை உதாரணமாக கொண்ட சிங்கப்பூர் கெட்ட விடயங்களை , அந்த புகையினை கூட உள்ளே விடாமல் விடாமல் அடக்கி வைத்தது. லீயின் கனவு சிங்கப்பூர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு எழ ஆரம்பித்தது. ஆனால் லீ கண்டது பெரும் கனவு, அதாவது புலி பாயும் கனவல்ல; புலிக்கு கழுகின் சிறகுகளை கொடுத்து பறக்கவைக்கும் கனவு. அவரின் எண்ணப்படி சிங்கப்பூர் எனும் புலி பாயவில்லை, பறக்க ஆரம்பித்தது.
1965 இல் இருந்து தீவிரமாக நாட்டுக்காக உழைக்க ஆரம்பித்தார் லீ குவான் யூ. சுத்தம் என்பது அவர்களுக்கு பிரிட்டிஷ்காரர் கற்றுக் கொடுத்தது, அமைதியான நாடு, நல்ல வாழ்க்கை அவர்களின் அடிப்படை உரிமைகள் என உறுதிமொழி எடுத்தார்.
அங்கு போராட்டம், இனக்கலவரங்களுக்கு இடமேயில்லை. உழைப்பு மட்டுமே முழு மூச்சாக கொண்டனர். எப்படி அந்த நாட்டு மக்கள் அவ்வாறு வாழ்ந்தார்கள் என நீங்கள் யோசிக்கலாம். அது மிக எளிதான உண்மை. வெவ்வேறு நாடுகளிலிருந்து உழைக்க மட்டுமே சென்ற கூட்டம் அது, கடுமையாக உழைக்க வேண்டும், முதலாளி சொல்லியபடி உழைக்கவேண்டும், நம் பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும், சுற்றியுள்ள மக்களோடு அமைதியாக வாழவேண்டும், நாடு சுத்தமாக இருக்கவேண்டும் என்பவைகளே அவர்களின் குறிக்கோள்கள்.
நாம் உழைத்தால்தான் நாம் வாழ முடியும் என நம்பும் மக்களின் சந்ததி வழியாக வந்த கூட்டம் அது. உழைப்பை தவிர வேறு ஏதும் பெரிதாக தெரிவதில்லை. அவ்வாறு அன்று முதல் இன்று வரை சிங்கப்பூரில் மிக குறைவான நிகழ்வுகளை தவிர ஒரு கலவரங்களையும் அறிய முடியாது. நமது தமிழ் கலாச்சாரத்தில் ஒன்றான பேரணி, அரசியல் செல்வாக்கு, போராட்டம், ஊழல் என விரும்பத்தகாத விடயங்கள் எல்லாம் அங்கு காண முடியாது. உழைப்பை மட்டும் நம்பி இருக்கும் அமைதியான கூட்டம் அவர்கள். அவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டி போல தலைவர் கிடைத்து விட்டால் அது எப்படி மாறும். சிங்கப்பூர் அப்படியொரு எண்ணங்களை கொண்ட மக்கள் உள்ள நாடு. அவர்களுக்கு நல்லதலைவர் லீ அப்படித்தான் வழிகாட்டியாய் இருந்தார்.
எந்த ஒரு வளமும் இல்லாத நாடு. யாரும் தேடி வர மாட்டார்கள். நீங்கள் வல்லரசு என நமக்காக கை கட்டமாட்டார்கள். ஆனால் அவற்றுக்கெல்லாம் ஒரே வழி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது, அந்நிய செலாவணிகளை அதிகரிப்பது. அதை செய்ய எவ்வாறு மற்ற நாடுகளின் அங்கீகாரத்தை பெறுவது? நல்ல ஒரு அரசாங்கமும் பாதுகாப்பான சூழலும் இல்லாமல், யார் முதலீடு செய்ய விரும்புவர்?.
இன்று போரும், உள்நாட்டு கலவரங்களாகவும் உள்ள நாட்டில் தொழில் தொடங்க யாராவது ஆர்வம் காட்டுவார்களா? நாட்டின் அமைதியும், பாதுகாப்பும் கவரும் தோற்றமுமே ஒரு நாட்டின் அந்நிய முதலீட்டுக்கு அடிப்படை விடயங்கள். சிங்கப்பூர் அதை சிறப்பாக வெளிக்காட்டியது.
தொடர்ச்சி ….
👉 நன்றி வணக்கம் 👈

0 கருத்துகள்